
- அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர்-நடத்துநர் (டி அண்ட் சி) பதவிக்கான 685 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் நிலையில், ஓட்டுநர்-நடத்துநர் (டி அண்ட் சி) பணிக்காக நடைபெற்ற எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்வுக்கான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில், சென்னை, மதுரை, கும்பகோணம், கோவை, நெல்லை, விழுப்புரம் உள்பட 8 போக்குவரத்து மண்டலங்கள் உள்ளன.
- இவற்றில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் ஓடுகின்றன. கடைசியாக இங்கு 2013-ம் ஆண்டுக்கு ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
- ஆனால் அதன்பிறகு கடந்த 10 ஆண்டுகளாக புதிய பணியாளர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் நியமிக்கப்படவில்லை.
- இதன் காரணமாக தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்கள் உள்ளன.
- இந்தப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
- அவர்களின் கோரிக்கையை ஏற்று அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
- அதன்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 685 டிசிசி (ஓட்டுநர் – நடத்துநர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
- ஆக.18 முதல் செப்.18-ம் தேதி வரை ww.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அரசுவிரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் டிசிசி (ஓட்டுநர் – நடத்துநர்) பதவிக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
- இந்நிலையில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர்-நடத்துநர் (டி அண்ட் சி) பதவிக்கான 685 காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலமாக நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட்டு தகுதி பெற்றவர்களுக்கும், இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்களில் தகுதி பெற்றவர்களுக்கும் என மொத்தம் 11,117 பேருக்கு சாலை போக்குவரத்து நிறுவனம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து எழுத்துத் தேர்வு நடத்தியது.
- தமிழகத்தின் 10 மாவட்டங்களில் நடைபெற்ற இத்தேர்வில் 9,352 பேர் பங்கேற்றாரகள்.அவர்களுக்கான மதிப்பெண் நவம்பர் 27-ம் தேதி வெளியிடப்பட்டது.
- இதைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு, ஓட்டுநர் நடைமுறை தேர்வுக்காக அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
- வரும் டிசம்பர் 28-ம் தேதி முதல் ஓட்டுநர் தேர்வு நடைபெற உள்ளது. எழுத்துத் தேர்வு முடிந்துள்ளள நிலையில், ஓட்டுநர் நடைமுறைத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் போன்றவற்றை போக்குவரத்துத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலை போக்குவரத்து நிறுவனம் நடத்த போகிறது.
- தற்போது நடந்து முடிந்திருப்பது 50 மதிப்பெண்ணுக்கு எழுத்துத் தேர்வு ஆகும். அடுத்தகட்டமாக சுமார் 100 மதிப்பெண் தேர்வினை போக்குவரத்து துறை தான் நடத்த போகிறது.
- இதில் மதிப்பெண் வழங்குவதில் முறைகேடு நடைபெறாமல் நியாயமாக தேர்வு நடைபெற வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- கடந்த முறை நேர்காணலின்போது தேர்வான அனைவரது பெயரையும் பென்சிலில் குறிப்பிட்டு, பின்னர் பணம் வழங்கியவர்கள் பெயரை பேனாவில் மாற்றி எழுதி இறுதி பட்டியல் வெளியிட்டதாக புகார்கள் எழுந்தது.
- அதுபோல் இல்லாமல் ஓட்டுநர் நடைமுறைத் தேர்வில் பங்கேற்போரின் மதிப்பெண்களை உடனே வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.