கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு பேருந்து முனையம் மாறிய காரணத்தால்.. தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசுப்பேருந்துகளில் கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது.

கோயம்பேட்டில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படுகின்றன; கோயம்பேட்டில் பேருந்து ஏற முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டண வித்தியாசத் தொகை திருப்பி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு பதில் பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் கோயம்பேடு, தாம்பரத்தில் இருந்து பஸ் முன்பதிவு செய்தவர்களின் டிக்கெட் கட்டணம் திரும்ப வழங்கப்படும் என எஸ்இடிசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்கு இல்லை:
கட்டண வித்தியாசத் தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பயணம் தொடங்கும்போதே நடத்துநர்களால் தொகை வழங்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். வங்கி கணக்கு வழியே கொடுக்க நேரம் எடுக்கும் என்பதால் பயணத்தின் போது வித்தியாச தொகையை நடத்துனரே பயணிகளிடம் வழங்குவார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” கடந்த சனிக்கிழமை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய பேருந்து முனையமாக இந்த பேருந்து முனையம் அனைத்து வசதிகளுடன் சிஎம்டிஏ-வால் அமைக்கப்பட்டிருக்கிறது.
கட்டணம் குறைப்பு;
இந்த நிலையில்தான் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு பேருந்து முனையம் மாறிய காரணத்தால்.. தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசுப்பேருந்துகளில் கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது. பயண தூரம் குறைந்த காரணத்தால்.. தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசுப்பேருந்துகளில் கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது.

பேருந்து ரூட்:
சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயங்கிய பேருந்துகள் இனி எந்தந்த வகையில் இங்கிருந்து இயங்கும்என்பது பற்றிய கேள்வி எழுந்துள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை இன்றைக்கு கோயம்பேட்டிலிருந்து இயங்குகின்ற பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து தெற்கு பகுதிக்கு செல்லும்.
எங்கே செல்லும்?:
பெங்களூர், கிழக்கு கடற்கரை சாலைகளுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயங்கும். அதேபோல தென் தமிழ்நாட்டிலிருந்து வருகின்ற பேருந்துகள் அத்தனையும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் முதல் பேருந்து நாளை காலை 4 மணி அளவிலே கோயம்பேட்டிற்கு வரும். அதற்குப் பிறகு வருகின்ற அத்தனை பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு தான் வரும்.
எப்படி இயங்கும்:
கோயம்பேட்டிற்கு செல்லாது. எனவே, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை முழுமையாக நாளையிலிருந்து கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து இயங்கும். சாதாரண நாட்களில் 300 புறப்பாடுகளும், வார இறுதி நாட்களில் 360 புறப்பாடுகள் கொண்ட அரசு விரைவு போக்குவரத்து கழகத்தினுடைய பேருந்துகள் அத்தனையும் கிளாம்பாக்கத்திலிருந்து இயங்கும். அதேபோல, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் டிசம்பர் 31-ஆம் தேதி காலையிலிருந்து சென்னையின் எல்லா பகுதிகளுக்கும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும். ஏற்கனவே உள்ள வழித்தடத்தில் இயங்கிக் கொண்டு இருக்கிற பேருந்துகளை தாண்டி, கூடுதலாகவும் பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.
மாநகர போக்குவரத்துக் கழகம்:
மாநகர போக்குவரத்துக் கழகத்தை பொறுத்தவரை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இங்கிருந்து (கிளாம்பாக்கம்) 270 நடைகள் இயக்கப்படும். ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து இங்கிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்லும். அதேபோல தாம்பரம் செல்கின்ற பேருந்துகள் 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்து கிளாம்பாக்கத்திலிருந்து தாம்பரத்திற்கு புறப்படும். இங்கிருந்து (கிளாம்பாக்கம்) கிண்டிக்கு செல்லும் மாநகர போக்குவரத்து பேருந்துகள் மூன்று நிமிடத்திற்கு ஒரு பேருந்து என்று இயக்கப்படும். ஏற்கனவே இந்த வழித்தடத்தில் 2386 நடை பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது கூடுதலாக 1691 நடை பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. எனவே, மொத்தம் 4077 நடைகள் கிளாம்பாக்கத்தின் இந்த வழித்தடத்திலே இயக்கப்படும். அதேபோல, இந்த அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அல்லாத மற்ற ஆறு போக்குவரத்து கழகங்கள் – விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய ஆறு அரசு போக்குவரத்து கழகங்களுடைய பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் வந்து அந்தந்த வழித்தடத்தில் இயங்கும். பொங்கல் வரை இந்த நிலை நீடிக்கும். பொங்கலுக்கு பிறகு அந்த அத்தனை பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு இயக்கப்படும். 1140 புறப்பாடுகள் பொங்கல் வரை கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும்.