தஞ்சை அரசு சரபோஜி கல்லூரியில் இன்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். தஞ்சை மாவட்டத்திற்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அவர், நிகழ்வில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டார். அவர் பேசுகையில், ” மக்களின் குறைகளைத் தீர்க்க உங்கள் பகுதிகளிலேயே ஜூலை 15 தொடங்கி தமிழ்நாடு முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட தகுதியுள்ள பெண்கள் இந்த முகாம்களில் உங்களின் விண்ணப்பங்களை நீங்கள் நிச்சயமாக தரலாம். இப்படி நீங்கள் தரும் விண்ணப்பங்கள் மேல் 45 நாள்களுக்குள் முடிவெடுக்கப்படும். ஜூலை இரண்டாவது வாரம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை இந்த முகாம்கள் நடக்கும்.இத்தனை துறைகள், சேவைகள், திட்டங்கள் இதில் எப்படி விண்ணப்பிப்பது? என்று நீங்கள் யோசிக்க வேண்டாம்.
உள்ளூர் அளவில் இதற்கான தன்னார்வலர்கள் உங்கள் வீடுதேடி வந்து, உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் பற்றி உங்களுக்கு விளக்குவார்கள். எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? என்ன சான்று, ஆவணங்கள் எல்லாம் இணைக்க வேண்டும்? தகுதி வரம்பு என்ன? இப்படி தேவையான எல்லா தகவல்களும், வழிகாட்டுதல்களும் உங்கள் வீட்டிற்கே வந்து கொடுப்பார்கள்” என்று கூறினார்.