
தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள 4,272 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கும் அடையாளமாக 6 பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். உடன் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ஆர்.காந்தி, தலைமைச் செயலர் சிவ் தாஸ், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் சி.சமயமூர்த்தி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் பொ.சங்கர்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.453.67 கோடியில் கட்டப்பட்ட 4,272 புதியகுடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டம்முருகமங்கலம், செம்மஞ்சேரி திட்டப்பகுதிகளில், ரூ.172.57 கோடியில்1,404 குடியிருப்புகள், மதுரைராஜாக்கூர், ஆத்திகுளம் திட்டப்பகுதிகளில் ரூ.81.21 கோடியில் 832 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், தருமபுரி மாவட்டம் நம்பிப்பட்டி திட்டப்பகுதியில் ரூ.42.26 கோடியில் புதிய 420 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
அதேபோல், கன்னியாகுமரிமாவட்டம், புதுக்குளம், ஈசாந்திமங்கலம் திட்டப்பகுதிகளில் ரூ.39.99 கோடியில் 416 குடியிருப்புகள், திருநெல்வேலி மாவட்டம் ஜெபா கார்டன் திட்டப்பகுதியில் ரூ.31.27 கோடியில், 320 அடுக்குமாடி குடியிருப்புகள், கள்ளக்குறிச்சி மாவட்டம் கீரனூர்-1 திட்டப்பகுதியில் ரூ.24.35 கோடியில் 264 புதிய குடியிருப்புகள், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் -1 மற்றும் 2-ம் திட்டப்பகுதிகளில் ரூ.41.04 கோடியில் 408 குடியிருப்புகள், கோயம்புத்தூர் வேடக்கு பேரூர்-1 திட்டப்பகுதியில் ரூ.11.22 கோடியில் 112 குடியிருப்புகள், கடலூர் மாவட்டம், பனங்காட்டு காலனி பகுதி – 2 திட்டப்பகுதியில் ரூ.9.76 கோடியில் 96 புதிய குடியிருப்புகள் என ரூ.453.67 கோடியில் கட்டப்பட்ட 4,272 குடியிருப்புகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை, ரூ.2,037.08 கோடி மதிப்பில் 19,777 அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மேலும், பயனாளிகள் தாமாகவீடு கட்டும் திட்டத்தின் கீழ் பல்வேறுமாவட்டங்களில் வசிக்கும் 4,680 பயனாளிகளுக்கு தனி வீடுகள்கட்ட தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.98.28கோடி மதிப்பிலான பணி ஆணைகளை வழங்கும் அடையாளமாக 3 பயனாளிகளுக்கு முதல்வர் ஆணைகளை வழங்கினார். நகர்ப்புற கைத்தறி நெசவாளர்களுக்கு வீடுகள் கட்ட மானியமாக வழங்கப்படும் தொகையை ரூ.4 லட்சமாக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாநில அரசு மானியம் ரூ.2.50 லட்சம், மத்திய அரசு மானியம் ரூ.1.50 லட்சம் வழங்கப்படுகிறது.
அந்த வகையில், 72 நகர்ப்புற கைத்தறி நெசவாளர்களுக்கு தலா ரூ.4 லட்சம்வீதம் ரூ.2.88 கோடி மதிப்பிலான பணி ஆணைகளை வழங்கும் அடையாளமாக 3 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார். மேலும், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100மாற்றுத் திறனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ஆர்.காந்தி, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா,வீட்டுவசதித் துறை செயலர் சி.சமயமூர்த்தி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் பொ.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Click Here to Join: