சென்னை: தங்க நகைக் கடன் வாங்குவதில் பல்வேறு விதிகளை விதித்து இருந்த ரிசர்வ் வங்கி அவற்றை திரும்பப் பெற்றுள்ளது. அதன்படி, ரிசர்வ் வங்கி புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இதில், ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள கடனுக்கு நகையின் மதிப்பில் 85 சதவீதம் கடன் வழங்கலாம் என்றும், நகையை அடகு வைத்து ஒரு ஆண்டுக்கு பிறகும் நகைக் கடனை, வட்டியை கட்டியோ அல்லது கூடுதல் நகைக்கடன் பெற்றோ புதுப்பித்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கடந்த செப்டம்பர் மாதம் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த நகைக் கடன் புதுப்பித்து கொள்ள விதிக்கப்பட்டு இருந்த தடையும் நீக்கப்பட்டு உள்ளது.
தங்க நகைக்கடன் வழங்குவதற்கான விதிமுறைகளை திருத்தி 9 விதிமுறைகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி. இந்த புதிய விதிமுறைகளின் படி, நகையின் மதிப்பில் 75% மட்டுமே நகைக்கடனாக வழங்கப்படும், தங்க நகைக்கடன் வாங்குவோர், நகைக்கு தாங்கள் தான் உரிமையாளர்கள் என்ற ஆதாரத்தை அளிக்க வேண்டும், தங்க நகையின் தூய்மைத்தன்மை குறித்து வங்கியிடம் சான்றிதழ் பெற வேண்டும் என கட்டுப்பாடு விதித்து இருந்தது. தற்போது இவற்றை நீக்கி உள்ளது.

தங்கம் விலை எவ்வளவு உச்சம் சென்றாலும், தங்க நகை விற்பனை என்பது அதிகரிக்கத்தான் செய்கிறது. விலை அதிகரித்தாலும் முதலீடுகளுக்காக தங்க நகைகளை பலரும் வாங்குகிறார்கள். இதேபோல் திருமணம் மற்றும் எதிர்கால சேமிப்புகளுக்காகவும் தங்க நகைகளை மக்கள் அதிகம் வாங்குகிறார்கள். ஏழைகள் விவசாயம் செய்வதற்கோ, திடீரென வரும் செலவுகளுக்கோ தங்க நகைகளை வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில் வைத்துவிட்டு பணமாக பெற்றுக்கொள்கின்றனர்.
பின்னர் வட்டியோடு பணத்தை செலுத்தி நகையை திருப்பி வருகிறார்கள். இதுஒருபக்கம் இருந்தாலும் ஒருசில தங்க நகைகளை வாங்கி அதனை வங்கியில் கடன் வைத்துவிட்டு பின்னர் மீண்டும் அந்த பணம் மூலமாக தங்க நகைகள் வாங்குவதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் இதுபோன்று சுழற்சி முறையில் செய்வதாக தெரியவந்தது. இதையடுத்து ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.
அதாவது தங்க நகைக்கடன் வழங்குவதில் வங்கிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. முதலில் அதற்கான வரைவு அறிக்கையையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருந்தது. இதில், தங்க நகை மதிப்பில் 75 சதவீதம் தான் கடன் வழங்க வேண்டும் என்றும், அப்படி அடகு வைக்கும் போது நகை உரிமைக்கான ஆதாரத்தையும் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தது. அதாவது நகை வாங்கிய பில் இணைக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.
ரிசர்வ் வங்கியின் இந்த கட்டுப்பாட்டுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. சில இடங்களில் போராட்டமும் நடந்தது. இதற்கிடையே மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு ஒரு கோரிக்கையினை வைத்தது. அதில், “ரூ..2 லட்சம் வரையிலான நகைக்கடனுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்க வேண்டாம் என்றும், நகை கடன் விதிமுறைகளை இப்போதைக்கு நடைமுறைப்படுத்தாமல் அடுத்த ஆண்டு அமல்படுத்த வேண்டும்” என்றும் ஆலோசனை வழங்கியது.
இந்த நிலையில் மத்திய அரசு ஆலோசனையை ஏற்றுக்கொண்ட ரிசர்வ் வங்கி புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள கடனுக்கு நகையின் மதிப்பில் 85 சதவீதம் கடன் வழங்கலாம் என்றும், ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான கடனுக்கு நகையின் மதிப்பில் 80 சதவீதமும், ரூ.5 லட்சத்திற்கு மேலான கடன்களுக்கு நகை மதிப்பில் 75 சதவீதமும் வழங்கலாம் என்று கூறியுள்ளது.