படித்த வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்களுக்கு மாதம் மாதம் உதவி தொகை வழங்கப்படுகிறது. 10ம் வகுப்பு முதல் பட்டம் பெற்றவர்கள் வரை உதவி தொகை பெற முடியும். யாருக்கு எவ்வளவு உதவி தொகை, மாதம் மாதம் 1000 ரூபாய் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
தமிழகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர் மற்றும் அதற்கு மேலும் உள்ள கல்வித்தகுதியை பதிவுசெய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்தல் செய்துவரும் பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் 200 ரூபாயும், 10ம் வகுப்புதேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 300 ரூபாயும், 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு 400 ரூபாயும், பட்டதாரிகளுக்கு 600 ரூபாயும் வழங்கப்படுகிறது. அதே மாற்றுத்திறனாளிகள் என்றால் 1000 ரூபாய் (பட்டப்படிப்பு) வழங்கப்படுகிறது. இந்த உதவி தொகை பெற விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ட வேலைவாய்ப்பு அதிகாரி ஜெரிபா ஜி.இம்மானுவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர் மற்றும் அதற்கு மேலும் உள்ள கல்வித்தகுதியை பதிவுசெய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்தல் செய்துவரும் பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உதவித்தொகை பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 31-12-2023 அன்று 5 ஆண்டுகள் நிறைவு செய்திருத்தல் வேண்டும். 31-3-2024 அன்று உச்ச வயது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 45 வயதுக்குள்ளும் மற்ற அனைத்து பிரிவினர்களுக்கு 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகைப்படாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத் திறனாளிகளைப் பொறுத்தவரை பதிவுசெய்து 31-12-2023 தேதியில் ஒரு ஆண்டு முடிவுற்றிருந்தால் போதுமானது. மேலும் மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு வயது வரம்பு மற்றும் வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை.
பொதுப்பிரிவில் பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.200-ம், பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம், பிளஸ்-2 தேர்ச்சிக்கு ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு ரூ.600-ம், மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை பள்ளியிறுதி வகுப்பிற்கு கீழ் மற்றும் பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சிக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.600-ம், பிளஸ்-2 தேர்ச்சிக்கு ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000-ம் வழங்கப்பட்டு வருகிறது.
மனுதாரர் பள்ளி அல்லது கல்லூரிப் படிப்பை தமிழகத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும். மனுதாரர் முற்றிலுமாக வேலையில்லாதவராக இருக்க வேண்டும். இந்த உதவித்தொகையினை பெற அரசிடமிருந்து வேறு எந்த வகையிலும் எந்தவிதமான உதவித்தொகையும் பெறுபவராக இருத்தல் கூடாது. கல்வி நிறுவனத்திற்கு தினமும் சென்று படிக்கும் மாணவ-மாணவிகளாக இருக்கக் கூடாது. ஆனால் தொலைதூரக் கல்வி மற்றும் அஞ்சல்வழிக்கல்வி கற்கும் மனுதாரா்கள் விண்ணப்பம் செய்யலாம். அதேநேரம் பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப்படிப்புகள் படித்த பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பற்றோர் நிவாரண தொகை பெற இயலாது.
தகுதி மற்றும் விருப்பமுடைய பதிவுதாரர்கள் தங்களது அசல் கல்விச்சான்றிதழ், மாற்றுக் கல்விச் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டையுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அலுவலக வேலைநாட்களில் நேரில் வந்து விண்ணப்ப படிவம் பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தின்கீழ் ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்கள் மற்றும் பெற்றுக்கொண்டிருக்கும் பயனாளிகள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. 3 ஆண்டுகளுக்கு குறைவாக இத்திட்டத்தின்கீழ் உதவித்தொகையை பெற்றுவரும் பயனாளிகள் இந்த உதவித்தொகையை தொடர்ந்து பெற (மாற்றுத்திறனாளிகள் 10 ஆண்டுகள் தொடர்ந்து பெற) சுயஉறுதிமொழி ஆவணத்தை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்” இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.