வேளாண் இயந்திரங்களுக்கு மானியம் வழங்கி, விவசாயிகளுக்கு சூப்பர் வசதியை தமிழக அரசு ஏற்படுத்தி தந்துள்ளது.. இந்நிலையில், தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, வேளாண் துறையில், தொழிலாளர்கள் பற்றாக்குறை போன்றவை ஏற்பட்டு வருகின்றன.. இந்த குறைகளை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
விவசாயிகள்:
அந்தவகையில், விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் விவசாய கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த இயந்திரங்களை விவசாயிகள் தங்களுடைய வீட்டிலிருந்தபடியே, ஆன்லைனில் ரிசர்வ் செய்துகொள்ளும் “இ-வாடகை” என்ற செயலியை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
இப்படிப்பட்ட சூழலில், வேளாண் கட்டமைப்பு நிதியின் கீழ், கடன் வசதி பெற்று கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்த, விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.. இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உள்ளதாவது :
அறுவடைகள்:
“பயிர் அறுவடைக்கு பின், விளைபொருட்களை காய வைத்தல், சுத்தம் செய்தல், தரம் பிரித்தல், மதிப்பு கூட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கான, வேளாண் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இது கடன் உதவி திட்டம்…
இந்த திட்டத்தில், அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரையிலான கடனுக்கு, ஏழு ஆண்டுக்கு 3 சதவீதம் வட்டி குறைப்பு வழங்கப்படுகிறது. கடன் தவணை தொகையை திருப்பி செலுத்த, விலக்கு அளிக்கப்பட்டுள்ள 2 ஆண்டுகள் உட்பட ஏழு ஆண்டுகளுக்குள் கடன் திருப்பி செலுத்தப்பட வேண்டும்..
சேமிப்பு கிடங்குகள்:
மின்னணு சந்தையுடன் கூடிய வினியோக தொடர் சேவை, சேமிப்புக் கிடங்குகள், சேமிப்பு கலன்கள், சிப்பம் கட்டும் கூடங்கள், தரம் பிரிப்பு மற்றும் வகைப்படுத்துவதற்கான இயந்திரங்கள், குளிர்பதன வசதிகள், முதன்மை பதப்படுத்தும் மையங்கள், பழுக்க வைக்கும் அறைகள் போன்ற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி, நுண்ணுயிர் உற்பத்தி நிலையங்கள், நவீன மற்றும்…துல்லிய பண்ணையத்திற்கான கட்டமைப்புகள், பகுதிக்கேற்ற பயிர் தொகுப்புகளை உருவாக்கி, ஏற்றுமதி செய்வதற்க…கான வசதிகள் ஏற்படுத்துதல், போக்குவரத்து வசதிகளுக்கும் கடனுதவி வழங்கப்படுகிறது.
இணையதள முகவரி:
இத்திட்டம் குறித்த விரிவான தகவல்களை அறியவும், விண்ணப்பிக்கவும், www.agriinfra.dac.gov.in என்ற இணைய தளத்தை அணுகலாம். மாவட்ட வேளாண் வணிகம் துணை இயக்குனர்கள் மற்றும் மாவட்ட தொழில் மையங்களை தொடர்பு கொள்ளலாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.