You are currently viewing TNPSC Group 4 VACANCY INCREASED TO 10748 – Happy News

TNPSC Group 4 VACANCY INCREASED TO 10748 – Happy News

குரூப் 4 தேர்வு எழுதியவர்களின் கோரிக்கையை ஏற்று காலி பணியிடங்களின் எண்ணிக்கையை தற்போது வரை 10,748 ஆக உயர்த்தி டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அதே நேரத்தில் இன்னும் இந்த பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளில் (குரூப் 4 பதவி) அடங்கிய கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரிதண்டலர் (கிரேடு 1), தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், பண்டக காப்பாளர் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இளநிலை உதவியாளர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இளநிலை உதவியாளர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வரிதண்டலர், சுருக்கெழுத்து தட்டச்சர் என மொத்தம் 7301 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30ம் தேதி அறிவித்தது. இத்தேர்வு எழுத 10ம் வகுப்பு தேர்ச்சி தான் கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், இன்ஜினியரிங் படித்தவர்கள் என போட்டி போட்டு விண்ணப்பித்தனர். இதில் 22 லட்சத்து 2942 பேர் தேர்வு எழுத அனுதிக்கப்பட்டனர். இதில் பெண்கள் 12,67,457 பேர், ஆண்கள் 9,35,354 பேர், மூன்றாம் பாலினத்தவர் 131 பேர், 27,449 மாற்றுத்திறனாளிகள், 12644 பேர் ஆதவற்ற பெண்கள், 6635 முன்னாள் படைவீரர்கள் ஆவர். குரூப் 4 தேர்வு எழுத 22 லட்சத்து 2942 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த தேர்வை 18 லட்சத்து 50 ஆயிரத்து 473 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். 3 லட்சத்து 52 ஆயிரத்து 468 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இந்த நிலையில் குரூப் 4 பணியிடங்களின் காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. கூடுதலாக 2,539 பணியிடங்கள் குரூப் 4 பணியிடங்களில் சேர்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குரூப் 4 காலி பணியிடங்களின் எண்ணிக்கை 9,840 ஆக உயர்ந்தது. இதனால் குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். தொடர்ந்து இரண்டாவது முறையாக மேலும் பணியிடங்கள் எண்ணிக்கையை டிஎன்பிஎஸ்சி அதிகரித்தது. அதாவது பணியிடங்களின் எண்ணிக்கை 10,117 ஆக உயர்ந்தது. இதனால் தேர்வர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிலையில் இந்தாண்டு மார்ச் 24ம் தேதி குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக 2019ம் ஆண்டுக்கு பிறகு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வை நடத்த முடியவில்லை. இதனால், குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று தேர்வு எழுதியவர்கள் டிஎன்பிஎஸ்சிக்கு கோரிக்கை மேல் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் இந்த பணியிடங்களை 20,000 முதல் 30000 வரை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை மூன்றாவது தடவையாக உயர்த்தியுள்ளது.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறுகையில், “குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 10,748 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் குரூப் 4 தேர்வுக்கான கலந்தாய்வை எவ்வளவு விரைவாக நடத்த முடியுமோ? அவ்வளவு விரைவாக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது” என்றனர். குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது தேர்வு எழுதியவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளதால் தேர்வு எழுதியவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்துள்ளனர். குரூப் 4 தேர்வுக்கான கலந்தாய்வை எவ்வளவு விரைவாக நடத்த முடியுமோ? அவ்வளவு விரைவாக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments